செம்மொழி மாநாட்டில் மடாதிபதிகள்-இ.முன்னணி கோரிக்கை
ஈரோடு: கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு மடாதிபதிகளையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
கோவில்களுக்குள் முறைகேடாக செயல்படுபவர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்கள்.
நடைபாதையில் உள்ள கோவில்களை அகற்றுவதை நான் தவறு என்று கூறவில்லை. ஆனால், அந்த கோவில்கள் பொதுமக்களின் தேவைக்காக அவர்களே உண்டாக்கியதாக உள்ளது என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும், ஏராளமான கோவில்களில் தேர் மற்றும் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது. கோவில்களில் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை கோவில்களின் பராமரிப்பு பணிக்கே செலவிட வேண்டும்.
கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட கொள்கையை அல்லது திராவிட இயக்க கருத்துக்களை பிரசாரம் செய்வதாகவோ இருக்க கூடாது.
தமிழின் வளர்ச்சியையும், ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆற்றிய தமிழ் தொண்டை யாராலும் மறந்துவிட முடியாது.
எனவே, செம்மொழி மாநாட்டில் சமய சான்றோர்கள் மற்றும் மடாதிபதிகள் ஆகியோரையும் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். மேலும், இந்து இயக்கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும்.
சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே 2 நாட்களுக்கு முன்பு ஒரு குண்டு வெடித்தது. இதற்கு போலீசார் யானையை விரட்ட வெடி வைக்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால், குண்டு வெடிப்பு பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் 20 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை போலீசார் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று செயல் இழக்கச் செய்தனர்.
கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இதற்கான அறிக்கை வெளியானதும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
அய்யப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு:
இந் நிலையில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக சபரிமலையில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சபரிமலை விழா சமயத்தில் பலத்த போலீஸ் காவல் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்த பிறகும், போலீஸ் துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது பக்தர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்கள் வழிபாடு செய்யும் முக்கிய இந்து கோவிலான சபரிமலையில் இந்துக்களை பயமுறுத்துவதற்காகவும், மக்களை சபரிமலை வரவிடாமல் தடுப்பதற்காகவும், அரசு எந்திரங்களுக்கு சவால் விடுவதற்காகவும் தான் பயங்கரவாதிகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பக்தர்களை காக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போலீஸ் துறை இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம் ஆகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.