எம்.ஜி.ஆர். வீட்டில் திருட்டு - கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வீட்டில் திருடிய வழக்கில், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் கீதாவின் கணவர் மதுமோகனின் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் டிரைவராக இருக்கும் 2 ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே மணப்பாக்கம், ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு உள்ளது. இதற்கு ராமாவரம் தோட்டம் என்று பெயர். இங்கு தற்போது எம்.ஜி.ஆரின் வளர்ப்புப் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
வீட்டின் மாடிப் பகுதியில் வளர்ப்பு மகள் கீதா வசித்து வருகிறார். இவரது கணவர் மதுமோகன். மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார். ஒரே மகன் ஆனந்த். இவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவருக்கு, கடந்த 20-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் மணமக்கள் இருவரும் மணமகளின் வீட்டிற்கு சென்றனர்.
அதன் பின்னர் மதுமோகன் தனது மனைவி கீதாவுடன் 24-ந் தேதி உறவினர் திருமணத்திற்காக கேரளாவிற்கு சென்றார். 4 நாட்களுக்கு பின் கடந்த 28-ந் தேதி காலை 10 மணிக்கு மதுமோகன் தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறை கண்ணாடி உடைந்து திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட் விரைந்து வந்து நேரில் பார்வையிட்டார். தனிப்படை அமைக்கப்பட்டது.
கீதா - மதுமோகன் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் முதலில் விசாரணை நடந்தது. பின்னர் மாம்பலத்தில் உள்ள மதுமோகன் நடத்தி வரும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஜான் என்கிற ஜான் துரைப்பழம் என்ற ஊழியர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மதுமோகனிடம் பத்து வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.
அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது, கீதா - மதுமோகன் வீட்டில் கார் டிரைவராக உள்ள கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் அனில்குமார் (30), பெருங்குடி கந்தன்சாவடியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயகிருஷ்ணன் (29) ஆகியோருடன் சேர்ந்து தான்தான் பரிசு பொருட்களை திருடியதாக ஒப்பு கொண்டார்.
இதையடுத்து ஜெயகிருஷ்ணனையும், கேரளாவிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அனில்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் ஜான் அளித்த வாக்குமூலத்தில்,
10 ஆண்டுகளுக்கு மேலாக மதுமோகனிடம் வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுமோகன் சூட்கேசை சரி செய்ய தந்த போது அதில் வீட்டின் வாசல் கதவு சாவி இருந்ததை கண்டு எடுத்து மறைத்து வைத்து கொண்டேன்.
மதுமோகனின் மகன் திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களை கண்ட நானும், அனில்குமார், ஜெய்கிருஷ்ணன் ஆகியோரும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம். கடந்த 24-ந் தேதி மாலை மதுமோகன் குடும்பத்தினரை அனில்குமார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு என்னிடம் போனில் பேசினான்.
உடனே நான் காரை மேற்கு மாம்பலம் அலுவலகத்திற்கு எடுத்து வர சொன்னோன். அதில் நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏறிக்கொண்டு ராமாபுரம் தோட்டத்திற்கு வந்தோம். வீட்டை சாவி போட்டு திறந்து சென்றோம்.
படுக்கை அறையின் சாவி கிடைக்காததால் அந்த அறையில் இருந்த வெண்டிலேட்டர் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று பீரோவை திறந்தோம். அங்கிருந்து திருமண பரிசு பொருட்கள், தங்க, வெள்ளி நகைகள், ஆள் உயர குத்துவிளக்கு ஆகியவற்றை எடுத்து கொண்டு காரில் அறைக்கு வந்தோம்.
பின்னர் பணத்தை பங்கு போட்டுக் கொண்டு வெள்ளிப்பொருட்களை அடகு வைத்தோம். குத்து விளக்குகளை விற்றோம். மேலும் வெள்ளி, தங்க நகைகளுடன் அனில் குமார் கேரளாவிற்கு சென்றார் என்று தெரிவித்தார்.