'டிவி'யில் இன்டர்நெட் வசதி: சென்னை-கோல்கத்தாவில் டாடா அறிமுகம்
கோல்கத்தா: தொலைக்காட்சி பெட்டி மூலம் இன்டர்நெட் வசதியை பெறும் புதிய சேவையை டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
'டயலாக்' (DIALOG) என்ற இந்த சேவையில் மூலம், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இல்லாமலேயே தொலைக்காட்சியில் இணையத்தை கையாள முடியும்.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அபிஜித் சன்யால் இந்த சேவையை நேற்று கோல்கத்தாவில் அறிமுகப்படுத்திய போது நிருபர்களிடம் கூறுகையில்,
'இந்தியாவில் முதல் முறையாக சென்னை மற்றும் கோல்கத்தாவில் டயலாக் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதல் மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த சேவை வழங்கப்படும். அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் முழுவீச்சில் இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இன்றைய சமூக நிலவரப்படி, தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். தொலைக்காட்சிப் பெட்டி ஒரு அத்தியாவசிய வீட்டு உபயோக சாதனமாக திகழ்கிறது.
இந்நிலையில், தொலைக்காட்சியின் மூலம் இணைய தளங்களில் பிரவேசிக்கும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க டாடா நிறுவனம் விரும்பியது' என்றார்.
'ஈ-மெயில், பிரத்தியேக வீடியோக்கள், ஆன்-லைனில் பாடல்கள் என பல்வேறு உபயோகமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை டயலாக் மூலமாக வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்' என விற்பனைப் பிரிவு மண்டல தலைவர் சஞ்சீவ் சின்ஹா குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications