ராமநாதபுரம் அருகே நிர்வாண தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து - மாவட்ட கலெக்டரிம் புகார் !
ராமநாதபுரம்: தனக்கும், தனது மனைவிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் நிர்வாண தண்டனை வழங்கப்பட்டதாகவும், தங்களது குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் கணவன்-மனைவி புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே குமரக்குடி காலனியில், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக வசித்து வருகின்றனர்.
இதில் சந்திரன் என்பவருக்கும், கிராம தலைவர் அழகு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, பரமக்குடி போலீசார் இரு தரப்பையும் விசாரித்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், அதே மாதத்தில் ஊர் கூட்டத்தில் சந்திரன் கடனாக பெற்ற ஊர் பணத்தை வட்டியோடு செலுத்த கிராம மக்கள் சார்பில் கேட்டுக் கொளளப்பட்டது. இதனையடுத்து, சந்திரனும் அந்த பணத்தை செலுத்தி உள்ளார்.
அதன் பிறகும், அவர் ஊர் பொது பாதையில் நடக்கவும், பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கவும், கிராமத்தினர் அவரது குடும்பத்தினருடன் பேசவும் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சந்திரன் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊர் மக்களோடு இணைந்து வாழ வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் அபராதம் கட்டுவதோடு, கிராமக் கூட்டம் முடியும் வரை கணவனும், மனைவியும் இருவரும் நிர்வாணமாக சபையை வணங்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கணவன் மனைவி இருவரும் இதை ஏற்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே இந்த சம்பவம் பற்றி புகார் கூறப்பட்ட நிலையில், மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் சந்திரனும் அவரின் மனைவியும் புகார் அளித்துள்ளனர்.