நளினியை விடுவிக்க இயலாது: சிறை ஆலோசனை குழு பரிந்துரை-தமிழக அரசு ஏற்பு

ஆலேசானைக் குழு 8 காரணங்களைக் கூறி நளினியை விடுதலை செய்ய இயலாது என கூறியுள்ளது. இதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் இவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
19 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி கடந்த 2006ம் ஆண்டு தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் நளினி கோரிக்கை வைத்தார். இதை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது. சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது என்று தமிழக அரசு நளினிக்கு பதில் அளித்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை ஆலோசனைக் கமிட்டியிடம் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆலோசனைக் கமிட்டி, நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில் நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நளினி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார் நளினி.
அந்த மனுவில், ஆலோசனைக் கமிட்டி முறையாக கூட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
நளினி தாக்கல் செய்த இந்த 2 மனுக்களையும் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து கடந்த 2008ல் தீர்ப்பளி்த்தார்.
அதில் நளினியின் கோரிக்கை குறித்து ஆலோசனைக் கமிட்டி சட்டப்படி கூடி விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே நேரத்தில் சிபிஐ விசாரித்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இதில் வேலூர் செசன்ஸ் நீதிபதி, வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் இடம் பெற்றனர். இந்தக் குழு நளினியை சந்தித்து விசாரணை நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு சாமி கோரினார்.
இந்த மனுவை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந் நிலையில் நளினியிடம் விசாரணை நடத்திய சிறை ஆலோசனைக் குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
கடந்த 11ம் தேதி இந்த அறிக்கையை நீதிபதிகள் எலிப் தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் தாக்கல் செய்தார்.
அப்போது ஆலோசனைக் குழு அளித்த இந்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் கோரினார்.
இந்த வழக்கு ஒரு தனி மனிதரின் வாழ்க்கைத் தொடர்பானது, எனவே விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை 29ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:
ஆலோசனை கமிட்டி முன்பு ஆஜராகி நளினி தன்னை விடுவிக்கக்கோரி கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கை குறித்து கடந்த மாதம் 20ம் தேதி கமிட்டி கூடி விவாதித்து முடிவெடுத்தது. நளினியின் கோரிக்கையை கமிட்டி நிராகரிப்பதாக முடிவெடுத்தது. இதற்கு 8 காரணங்களையும் அந்த குழு தெரிவித்துள்ளது.
இந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்று நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதில்லை என்று கடந்த 24ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்றார்.
இதன்மூலம் நளினி முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
முன்னதாக சிறை ஆலோசனைக் குழு தனது அறிக்கையில், நளினியின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுவிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அவரை விடுவிக்க இயலாது என்றே அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஏன் விடுதலை இல்லை?-கமிட்டி சொல்லும் காரணங்கள்:
ஆலேசானைக்குழு 8 காரணங்களைக் கூறி நளினியை விடுதலை செய்ய இயலாது என கூறியுள்ளது.
அதன் விவரம்: நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
தன்னுடைய குழந்தைக்கு தயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கைய ஏற்க முடியாது.
18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது. அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாக கூறவில்லை.
இவ்வாறு கமிட்டியின் அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர், சென்னை மாவட்ட ஆட்சியர், உள்ளூர் காவல்துறை ஆகியோரின் அறிக்கையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கமிட்டியின் இந்த பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications