காங் பிரமுகர் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் கலெக்டரிடம் தஞ்சம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் தப்பி வந்து கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஏரலில் உள்ள செங்கல் சூளையில் 4 தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பணிபுரிந்து வந்தனர். தாங்கள் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி அங்கிருந்து தப்பி வந்து கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கலெக்டர் பிரகாசை சந்தித்து தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய கலெக்டர் பிரகாஷ் அவர்களது உடைமைகளை மீட்டு ஓப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து செங்கல் சூளையில் இருந்து தப்பி வந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள குராயூரை சேர்ந்த முத்துபாண்டி கூறுகையில், நான் எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஏரலில் உள்ள காங் பிரமுகர் கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக வந்தோம். எங்களை சங்கரன்கோவிலை சேர்ந்த மேஸ்திரி செல்வம் என்பவர் அழைத்து வந்தார்.
அங்கு எங்களுடைய குடும்பத்தினரை போலவே எங்கள் பகுதியை சேர்ந்த நாடி முத்து, மாரி மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினரும் இருந்தனர்.
எங்களிடம் வெற்றி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கூலியும், அடிப்படை வசதிகளும் தராமல் கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர். உணவும் சரியாக தரவில்லை. அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தனர். நாங்கள் கோயிலுக்கு செல்வதாக கூறி தப்பி வந்து விட்டோம். அவர்களிடம் இருந்து எங்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என்றார். அவர்களது கோரிக்கையை ஏற்று கொண்ட கலெக்டர் பிரகாஷ் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட செங்கல் சூளை காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானதாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications