நளினி மீது 4 வழக்குகள்-வேறு சிறைக்கு மாற்ற திட்டம்?
நளினியின் கணவர் முருகனும் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் முருகன் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து வரப்படுவார். அங்கு நளினியை முருகன் சந்தித்து பேசுவார். கம்பி வளையத்துக்கு நடுவே இருவரும் எதிர் எதிரே நின்று சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேச அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சந்திப்புக்கு அனுமதி தரப்படுகிறது.
இந் நிலையில், நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நளினி விடுதலையாகும் விஷயத்தில் பின்னடைவை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண் கைதி ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் ழக்கு போட்டு, சிறை அதிகாரி ஒருவரிடமிருந்து ரூ.50,000 நஷ்டஈடு பெறும் நிலை உருவானது. சாரதா தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த ஒருசில நிமிடங்களில் அது குறித்து அவரது வழக்கறிஞருக்கு தகவல் வந்துவிட்டது.
யாரோ ஒரு பெண் கைதி ரகசியமாக செல்போனை உபயோகித்து வருவதாக அப்போதே சிறை அதிகாரிகள் சந்தேகப்பட்டனர்.
நளினியிடம் சிறை அதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்ளும் சில சம்பவங்கள் பற்றியும் அவரது வழக்கறிஞருக்கு உடனடியாகத் தகவல்கள் போய்விட்டன.
இதனால் நளினி செல்போன் வைத்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். அடிக்கடி நளினியின் அறையை சோதனை போட்டு வந்தாலும் செல்போன் ஏதும் சிக்கவில்லை.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு நளினியின் அறையை சோதனை போட்டபோதும் செல்போன் சிக்கவில்லை.
ஆனால், அடுத்த 20 நிமிடத்தில் சிறை எஸ்பி ராஜலட்சுமி, துணை ஜெயிலர் லட்சுமி ஆகியோர் தலைமையில், பெண் அதிகாரிகள் கோமளா, அன்புசெல்வி, சுபஜோதி, மரகதம், சுலோக்சனா, ஜோதி, வனிதா ஆகியோர் மீண்டும் அதிரடியாக நளினியின் அறைக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
சோதனை முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நளினி மீண்டும் தனது அறைக்குள் ஜெயில் அதிகாரிகள் நுழைந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
நளினியின் அறையில் இருந்த ஒரு பையை பெண் ஊழியர் சுபஜோதி சோதித்தபோது உடனே பையை பிடுங்கிய நளினி அதற்குள் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு கழிவறைக்குச் சென்று அதை கழிவறை குழாயில் வீசினார்.
அதோடு வாளியில் இருந்த தண்ணீரையும் எடுத்து ஊற்றினார்.
இதையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களின் உதவியோடு சிறையின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியைத் திறந்து அதற்குள் கிடந்த செல்போனை மீட்டனர்.
காலை 6.30 மணியில் இருந்து 9.30 மணி வரை சுமார் 3 மணி நேர போராட்டத்துப் பின்னரே செல்போன் கைப்பற்றப்பட்டது.
அந்த செல்போன் இரவோடு இரவாக பாதுகாப்போடு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிறைத்துறை இயக்குனர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தப்பட்டது.
அதை நேற்று உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட்டிடம் சுந்தர் ஒப்படைத்தார். அது நோக்கியா செல்போன் ஆகும். ஏர்டெல் சிம் கார்டு போடப்பட்டுள்ளது. அந்த செல்போனின் நம்பர் 96ல் ஆரம்பித்து 52ல் முடிவடைகிறது.
கடந்த 6 மாதமாக நளினி இந்த செல்போனை உபயோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நளினி ஜெயிலில் இருந்து வெளியில் யார், யாரோடு என்னென்ன பேசினார் என்பதை உளவுப்பிரிவு போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.
இந்த செல்போன் யார் பெயரில் உள்ளது. அது எங்கு வாங்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த செல்போன் குறித்து நளினியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், எந்த பதிலையும் தர அவர் மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. செல்போனை கண்டுபிடித்த அதிகாரிகளால், சார்ஜரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி அடைக்கப்பட்டுள்ள தனிமை சிறைக்கு எதிரே உள்ள ஹாலில் டி.வி உள்ளது. டி.விக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் வயரில் நளினி யாரோ ஒருவரின் உதவியோடு செல்போனை சார்ஜ் செய்து வந்திருக்கலம் என்று தெரிகிறது.
நளினி மீது போலீசில் சிறைத்துறை புகார்:
இந் நிலையில் நளினியின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வேலூர் பெண்கள் சிறைத்துறை அதிகாரி ராஜலட்சுமி, வேலூர் பகாயம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில், வேலூர் சிறையில் ஆய்வின் போது ஆயுள் தண்டனை அனுவத்து வரும் நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. அதனால் இதைப்பற்றி விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் குற்ற உணர்வோடு செயல்படுதல் (இந்திய தண்டனை சட்டம் 353), குற்றத்தை மறைக்க முயன்றது (201), அரசு ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் (186), சிறைத்துறை 42வது சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நளினி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புகார் குறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி நளினியிடம் சிறையில் சென்று விசாரணை நடத்தவுள்ளார்.
இந்த 4 பிரிவுகளின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் நளினிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வீண் பழி: நளினி வழக்கறிஞர்
ஆனால், சிறைக்குள் நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறையினர் வீண் பழி சுமத்துவதாக அவரது வழக்கறிஞர் பா.புகழேந்தி கூறியுள்ளார்.
நேற்று சிறையில் நளினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
வேலூர் பெண்கள் மத்திய தனிச்சிறையில் நடக்கும் கொடுமைகள், அத்துமீறல்கள் குறித்து, ஏப்ரல் 6, 12ம் தேதிகளில் சிறைத்துறைத் தலைவருக்கு நளினி 3 பக்கங்கள் கொண்ட மனு அனுப்பி இருந்தார்.
இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் செல்போன் பிடிபட்டதாக நளினி மீது பொய் குற்றச்சாட்டை திணித்துள்ளனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
இந் நிலையில் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதைத் நளினி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேறு சிறைக்கு மாற்றத் திட்டம்?:
இந் நிலையில் நளினியை சென்னை அல்லது மதுரை சிறைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.