கலர் கலர் பஸ்கள்!.. விதவிதமான கட்டணம்!!
சென்னை: அதிமுக ஆட்சியின் போது எந்த பஸ்சுக்கு என்ன கட்டணம் என்று நிர்ணயித்து இருந்தார்களோ அதே கட்டணம் தான் இப்போதும் வசூலிக்கப்படுகிறது, கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
சண்முகவேல் (அதிமுக): அதிமுக ஆட்சியில் பஸ் கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது பஸ்களின் நிறத்தை மாற்றி விதவிதமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டீர்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் குறைவாக இருக்கும் என்று கூறியிருந்தீர்கள். ஆனால், சொன்னதை நிறைவேற்றவில்லை.
அமைச்சர் நேரு: அதிமுக ஆட்சியின் போது எந்த பஸ்சுக்கு என்ன கட்டணம் என்று நிர்ணயித்து இருந்தார்களோ அதே கட்டணம் தான் இப்போதும் வசூலிக்கப்படுகிறது, கட்டணம் உயர்த்தப்படவில்லை.
சென்னை நகரில் இப்போது 3,161 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியின்போது 2,554 பஸ்கள் தான் இயக்கப்பட்டன. இதில் சாதாரண பஸ்கள் 698. அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்டது 646.
அதிமுக ஆட்சியில் எல்.எஸ்.எஸ். பஸ்கள் 993 இயக்கப்பட்டன. ஆனால் இப்போது 361 இயக்கப்படுகின்றன. கடந்த ஆட்சியில் 400 எக்ஸ்பிரஸ் பஸ்களும், இந்த ஆட்சியில் 415ம், கடந்த ஆட்சியில் 504 எம் சர்வீஸ் பஸ்களும், இந்த ஆட்சியில் 749ம் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சியில் சொகுசு பஸ்கள் வாங்கப்படும் என்று அறிவித்து விட்டு வெறும் 11 பஸ்கள் இயக்கப்பட்டன. இப்போது 848 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிமுக ஆட்சியில் ஏசி பஸ்கள் வாங்கப்படும் என்று அறிவித்துவிட்டு ஒரு பஸ்ஸைக் கூட வாங்கவில்லை. இப்போது 90 ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிமுக ஆட்சியில் சாதாரண பஸ்களுக்கு கிலோமீட்டருக்கு 28 காசும், விரைவு பஸ்களுக்கு 32 காசும், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு 38 காசும், சொகுசு பஸ்சுக்கு 52 காசும் நிர்ணயிக்கப்பட்டன.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரைவு பஸ் கட்டணத்தை கி.மீக்கு 30 காசாக குறைத்தார். சூப்பர் டீலக்ஸ், ஏ.சி. வால்வோ பஸ்களுக்கு கிலோமீட்டருக்கு 85 பைசா, 1 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சண்முகவேல் (அதிமுக): அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் உயர்த்தவில்லை என்கிறார். கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும்.
அமைச்சர் நேரு: உறுதியாக சொல்கிறேன், கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மொத்தம் 16,000 பஸ்கள் இருந்தன. ஆனால் 4 ஆண்டு திமுக ஆட்சியில் 15,000 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன. கலரை மாற்றி கட்டணத்தை உயர்த்தியதாக உறுப்பினர் கூறினார். அது சரியல்ல. கடந்த 8 ஆண்டாக அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
துணை சபாநாயகர்: சபாஷ், சரியான போட்டி!
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): விரைவு பஸ்களின் சாதாரணக் கட்டணம் 28 காசு என்று அமைச்சர் கூறினார். ஆனால் 38, 32 காசு என்றெல்லாம் இருக்கிறது. இதையும் முதல்வர் குறைத்தார் என்று அமைச்சர் கூறினார். எந்த அரசிதழில் அது வந்துள்ளது. அப்படி என்றால் கட்டணத்தை கூட்டித் தானே குறைத்தார்கள். இது எப்போது நடந்தது?.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பாலபாரதி சொல்வாரா?
துணை சபாநாயகர்: பீட்டரிடம் மேட்டர் இருக்கு!
அமைச்சர் நேரு: அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதையும் தற்போது உள்ள கட்டணம் பற்றியும் விரிவாக கூறியிருக்கிறேன். எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை. நீதிமன்றத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று நிரூபிக்க தயார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்டணம் குறித்து சட்டசபையில் பிரச்சனை எழுந்தபோது முதல்வர் எங்களை அழைத்து பேசினார். அப்போது தான் 38 பைசா என்ற கட்டணமே இல்லாமல் செய்து 32 பைசாவாக குறைத்தோம். ஆகவே சொன்னபடி கட்டணத்தை குறைத்துள்ளோம்.
சண்முகவேல் (அதிமுக): தான்தோன்றித்தனமாக கட்டணத்தை ஏற்றி உள்ளீர்கள்.
அமைச்சர் கே.என்.நேரு: இந்த கட்டணத்தை நியமித்ததே உங்கள் அம்மா (ஜெயலலிதா) தான். அவர்களே தான்தோன்றித்தனம் என்று சொல்கிறீர்களா?
செங்கோட்டையன் (அதிமுக): இப்போது அமைச்சர் கூறிய வார்த்தை தேவையா?
அமைச்சர் துரைமுருகன்: தான்தோன்றித்தனம் என்று அதிமுக உறுப்பினர் சொன்னதால் அமைச்சர் அதற்கு பதில் சொன்னார். வேண்டுமானால் இரண்டையும் அவைக்குறிப்பில் இருந்து எடுத்துவிடலாம்.
சண்முகவேல் (அதிமுக): அம்மா ஆட்சியில் ஏழைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பஸ்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது பஸ்கள் பராமரிக்கப்படாததால் பழுதடைந்து ஆங்காங்கே நிற்கின்றன. பஸ் தொழிலாளர் நலனை காக்க இந்த அரசு தவறி விட்டது. பஸ் கட்டணத்தை விருப்பம் போல் உயர்த்தி விட்டு உயர்த்தவில்லை என்று கூறுகிறீர்கள். இதை யாரும் ஏற்க மாட்டார்கள்
இதையடுத்து கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதாரண பேருந்துகளுக்கும், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு பேருந்துகளுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பேருந்துகளுக்கும் இடையே உள்ள கட்டண விகிதங்களை ஒப்பிட்டு அமைச்சர் கே.என்.நேரு விளக்கினார்.












Click it and Unblock the Notifications