மும்பை தாக்குதல்-இந்தியர்கள் குறித்த விசாரணை சரியில்லை: நீதிபதி கண்டனம்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரின் பங்கு குறித்து அரசுத் தரப்பில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று நீதிபதி தஹிளியானி கண்டனம் தெரிவித்தார்.இதுகுறித்து நீதிபதி கூறுகையில், அன்சாரியிடம் மும்பை குறித்த வரைபடம் கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரம் சரியில்லை. அன்சாரி வைத்திருந்த மேப்பை விட கூகுள் தளத்திற்குப் போனால் மிக சிறந்த மேப்பை பெற முடியும். தீவிரவாத தாக்குதலை நடத்தும் ஒருவர், இவ்வளவு மோசமான மேப்பை வைத்துக் கொண்டுதான் செய்வார் என்று அரசுத் தரப்பு கூறியது நம்பும்படியாக இல்லை.
மேலும், அந்த வரைபடத்தில் ரத்தக்கறை எதுவும் இல்லை என்றும் கூறிய நீதிபதி, இரு இந்தியர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக தெரிவித்தார்.
அன்சாரி, சபாபுதீன் ஆகிய இருவர் தொடர்பான விசாரணையை அரசுத் தரப்பு சரிவர மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது இந்த வழக்கை விசாரித்த மும்பை குற்றப் பிரிவு காவல்துறைக்கு கிடைத்துள்ள பெரிய தோல்வியாகவே கருதப்படுகிறது.
தீர்ப்புக்குப் பின்னர் பஹீம் அன்சாரியின் வழக்கறிஞர் ராஜேந்திர மொகாஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுத் தரப்பில் முன் வைக்கப்பட்ட வரைபட ஆதாரத்தை நீதிபதி நிராகரித்து விட்டார்.
கொல்லப்பட்ட தீவிரவாதி அபு இஸ்மாயிலின் சட்டைப் பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வரைபடத்தை அன்சாரிதான் கொடுத்தார் என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. ஆனால் அது ஏற்கும்படியாக இல்லை என்று நீதிபதி கூறி விட்டார்.
எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தோம். அதேபோல நடந்துள்ளது என்றார்.
இதற்கிடையே, மும்பை தாக்குதல் வழக்கிலிருந்து அன்சாரியும், சபாபுதீனும் விடுவிக்கப்பட்டாலும் கூட பெங்களூர் குண்டுவெடிப்பு மற்றும் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவரும் முக்கியக் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்சாரி, சபாபுதீன் ஆகிய இருவருமே மும்பை தாக்குதலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அன்சாரியை போலீஸார் உ.பி. மாநிலம் லக்னோவில் வைத்து 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தனர். சபாபுதீன் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டார். மும்பை சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் மும்பைக்குக் டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டனர்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களை உளவு பார்த்து தகவல்கூறியதாக அன்சாரி மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஷேக் என்பவருக்கு மும்பை வரைபடங்களை அவர் கொடுத்ததாகவும், அதை ஷேக், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு.
அன்சாரியும், ஷேக்கும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சியை எடுத்ததாகவும், அந்த பயிற்சி முகாமில் கசாப் உள்ளிட்ட மும்பையில் தாக்குதல் நடத்திய பத்து தீவிரவாதிகளும பங்கேற்றதாகவும் மும்பை காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்தியர்கள் விடுதலையை எதிர்த்து அப்பீல்:
இதற்கிடையே, இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று மும்பை தாக்குதல் வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சந்தேகத்தின் பலன் அடிப்படையில்தான் இருஇந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார்.