மும்பை தாக்குதலில் பாக். தொடர்பு இல்லை என்பது நிரூபணமாகி விட்டது – ஜமாத் உத் தவா கருத்து
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பைப் பார்க்கும்போது, பாகிஸ்தானுக்கும், அந்த சம்பவத்திற்கும் எந்த்த் தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகி விட்டது என்று கூறியுள்ளது ஜமாத் உத் தவா அமைப்பு.
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மறு பெயர்தான் ஜமாத் உத் தவா. லஷ்கர் அமைப்புக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்ப்ட்டுள்ளதால், ஜமாத் உத் தவா என்ற புதிய பெயரில் அது இயங்கி வருகிறது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து இந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா முஜாஹித் கூறுகையில், மும்பை சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்பட்ட பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரும் நிரபராதிகள் என மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் தொடர்புக்கான ஆதாரம் இந்தியாவிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் மும்பை சம்பவத்தை வைத்து இந்தியா ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தானை குற்றம் சாட்டி வரும் இந்தியாவிடம் அதற்கான ஆதாரம் இல்லை என்பதும் கண்கூடாகியுள்ளது.
பாகிஸ்தான் மீது அவதூறு சுமத்த இந்த சம்பவத்தை பயன்படுத்தி வந்தது இந்தியா. காஷ்மீர்ப் பிரச்சினை, பாகிஸ்தானுக்கு ஆற்று நீர் செல்வதை தடுப்பது போன்ற முக்கியமான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திருப்பும் வகையில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி பெரிதாக்கி பிரசாரம் செய்து வந்தது இந்தியா. இனியாவது அதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
யாஹியா தனது அறிக்கையில், கசாப் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஜமாத் உத் தவா நிறுவனரான ஹபீஸ் சயீத்தும், லக்வியும் மும்பை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும்தான் மும்பை சதித் திட்டத்தை தீட்டியவர்கள்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடி லஷ்கர் இ தொய்பா அமைப்புக்குத் தடை விதித்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் அரசு நடவடிக்கையில் இறங்கி, ஜமாத் உத் தவா அலுவலகங்களில் ரெய்டு நடத்தி அவற்றை மூடியது. சயீத்தையும் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. ஆறு மாத காலம் வீட்டுக் காவலில் இருந்த சயீத் மீது தொடர்நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதால், அவரை விடுதலை செய்யுமாறு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சயீத் வெளியே வந்து விட்டார்.
மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதிக்கவில்லை என்றும் கூறியது.
பாகிஸ்தான் அரசின் இந்த இரட்டை நிலையால், சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான விஷமப் பிரசாரத்தை சயீத் பல மடங்கு அதிகரித்துள்ளார். காஷ்மீரை விடுவிக்க இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக பேசி வருகிறார்.