நியூயார்க் கார் குண்டு: பாகிஸ்தானியர் கைது – பலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்

இவர் மட்டுமல்லாமல் இவருடன் பலரும் சேர்ந்து பெரும் தாக்குதல் திட்டத்தை தீட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ஒரு கார் அனாதரவாக நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து புகை வெளியாகவே போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். காரைப் பரிசோதித்தபோது அதில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து டைம்ஸ் சதுக்கப் பகுதியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தக் குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த காருக்கு உரிமையாளரை போலீஸார் தேடி வந்தனர். தற்போது அவர் பிடிபட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் செட்டிலாகி குடியுரிமை பெற்றவர் என்று தெரிய வந்துள்ளது. அவரது பெயர் சஷாத் பைசல். கனக்டிகட்டில் வசித்து வருகிறார்.
அமெரிக்காவை விட்டு தப்பி ஓட முயன்றபோது பைசலை, ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து எப்பிஐ அதிகாரிகள் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த கார் 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நிஸ்ஸான் காராகும். சமீபத்தில்தான் இந்தக் காரை பைசல் வாங்கியுள்ளார். வெடிகுண்டு வைப்பதற்காக இதை அவர் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பைசலிடம் எப்பிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து எரிக் ஹோல்டர் கூறுகையில், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பைசலுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானிய –அமெரிக்கராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட காரில் சில மாற்றங்களைச் செய்து வெடிகுண்டைப் பொருத்தியுள்ளனர். இதைச் செய்தவர் ஒரு பாகிஸ்தானி என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்கர்களைக் கொல்லும் திட்டத்துடன் அந்த கார் குண்டுத் திட்டத்தை தீட்டியுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள சிலருடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த கட்டமைப்பை முழுமையாக கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications