போர்க்குற்றங்களை அம்பலமாக்குவேன்- பொன்சேகா மீண்டும் ஆவேசம்

இலங்கை ராணுவத்தின் பிடியில் தற்போது பொன்சேகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலுக்கு முன்பு அவருக்கு ராஜபக்சே அரசு பெரும் நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து போர்க்குற்றச் செயல்களை வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பொன்சேகா. இருப்பினும் அவர் எதையும் கூறவில்லை. பின்னர் அதிபர் தேர்தல் முடிந்த சூட்டோடு உள்ளே பிடித்து போட்டுவிட்டார்கள் பொன்சேகாவை.
போரின் இறுதிக் கட்டத்தின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கைப் படைகள். ஐ.நா கணக்குப்படி 7000 அப்பாவிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.
இதுதொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்து வருகிறபோதிலும் அதற்குஇதுவரை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்தநிலையில், போர்க்குற்ற ரகசியங்களை மீண்டும் அம்பலமாக்கப் போவதாக பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து பொன்சேகா கூறுகையில், போரின் கடைசிக் கட்டத்தில் நடந்தவை குறித்த குற்றச்சாட்டுக்கள் விரிவாக, சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும்.
போரின் கடைசிக் கட்டத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிட நான் தயார். நான் யாரையும் காக்க விரும்பவில்லை. அதைச் செய்யவும் மாட்டேன் என்றார்.
நேற்று பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, உள்ளே இருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் பொன்சேகா.
பொன்சேகா தொடர்ந்து கூறுகையில், நான் ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவேன் என்று அரசு அஞ்சுகிறது. இதனால்தான் என்னை முடக்க கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை அது மேற்கொண்டுள்ளது.
இந்த நாட்டின் தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லாமல் இருந்தால் அந்த நபர் தேச பக்தியே இல்லாதவராகவே கருதப்படுவார்.
போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த அனைத்துமே விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டதாக முன்பே கூறியவர்தான் பொன்சேகா என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications