ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விரைவில் முடிவு-பிரதமர்
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதனால் இந்தக் கணக்கெடுப்பு மிக அவசியம் என்று பெரும்பாலான கட்சிகள் கோரி வருகின்றன.
ஆனால், இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை பாஜக மறைமுகமாக எதிர்த்து வருகிறது.
இதுகுறித்து லோக்சபாவிலும் படு சூடான விவாதங்கள் நடந்தன. இந்த விவாதத்தின்போது ஜாதிவாரி கணக்கெடு்ப்பை வலியுறுத்திப் பேசினார் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்.
அப்போது பிரச்சனையை திசை திருப்பும் விதத்தில், வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் குறித்த பிரச்சனையை பாஜக கிளப்பியது.
அப்போது லாலு பிரசாத் யாதவுக்கும், கர்நாடக பாஜக எம்பி அனந்தகுமாருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்றும் சூடான விவாதம் நடநத்து. விவாத்த்தின்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து விரைவில் அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்தார்.
முன்னதாக விவாதத்திற்குப் பதிலளித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தலைமை பதிவாளர் தெரிவித்து இருக்கிறார். கணக்கெடுப்பு ஊழியர் என்பவர், விசாரணை நடத்துகிறவரோ அல்லது விவரங்களை சரிபார்ப்பவரோ அல்ல.
மொத்தம் உள்ள 21 லட்சம் கணக்கெடுப்பாளர்களில் பெரும்பான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்கள். அவர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுக்கும் பணியில் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை.
சில மாநிலங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உட்பிரிவும் உள்ளது. உங்கள் சாதி என்ன?' என்ற கேள்விக்கு அளிக்கப்படும் பதிலை பதிவு செய்து கொள்ளும்படி கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். இது ஒரு சாதாரண தகவல் சேகரிப்புதான். உறுப்பினர்களின் கருத்துக்கள் நிச்சயம் கவனிக்கப்படும் என்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளதால் இது மிகவும் அவசியமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டப் பணி நடக்கிறது. இதில் வீடுகளின் எண்ணிக்கை, குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கிடப்படுகின்றன. இது 6 மாதங்கள் வரை நடக்கும்.
இதையடுத்து இரண்டாவது கட்டப் பணி தொடங்கும். அப்போது ஒவ்வொரு குடும்பத்தின் வருவாய் உள்ளிட்ட பிற கேள்விகள் கேட்கப்படவுள்ளன. அப்போது ஜாதி குறித்த கணக்கெடுப்பையும் நடத்தலாம் என்று லாலு உள்ளிட்டவர்கள் மத்திய அரசிடம் கோரி வருகின்றனர்.
ராமதாஸ் கோரிக்கை:
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான முடிவினை மிக விரைவிலேயே அமைச்சரவை மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
இது நாட்டின் பெருபான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். குறிப்பாக, இந்த கோரிக்கையை கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி போராடி வந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வெற்றியை பாமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.
நாட்டின் ஜனநாயகமும், எதிர்காலமும் காக்கப்பட வேண்டுமானால், அனைத்து இடங்களிலும் அனைத்து சமூகங்களும் அவரவர் விகிதாச்சார அளவின்படி, உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும். கல்வி பெறுதல், கல்வி அளித்தல், வேலை வாய்ப்பு மற்றும் அதிகாரமிக்க பதவிகள் என அனைத்திலும் மக்கள் தொகைக்கேற்ப சமூகங்கள் விகிதாச்சார பங்கு பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு-சமச்சீரான வளர்ச்சி; அதன் மூலம் சமூகநீதி என்ற லட்சியத்தை அடைய உதவும் வகையில், சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும். இதனை மத்திய அரசு இப்போது உணர்ந்து, நல்லதொரு முடிவினை அறிவித்திருக்கிறது.
நடைபெற்று வரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மேற்கொள்ள மத்திய அரசு காலதாமதமின்றி ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.