கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ. அமரமூர்த்தியின் தம்பி மகன் மீட்பு
அரியலூர்: வெள்ளிக்கிழமை பணம் கேட்டு கடத்தப்பட்ட அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரமூர்த்தியின் தம்பி பழனிச்சாமியின் மகனை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அரியலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமரமூர்த்தி. இவரது தம்பி பழனிச்சாமி. பழனிச்சாமி விவசாயி ஆவார். அரியலூர் அருகே பாளையப்பாடி கிராமத்தில் வசிக்கிறார். பழனிச்சாமி மகன் தர்மதுரை. கீழப்பழூர் தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து கிராமத்துக்கு பேருந்தில் வந்து இறங்கிய அவரிடம், பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 4 பேர் பேசியுள்ளனர்.
பின்னர், அவர்கள் வந்திருந்த காரில் தர்மதுரையை ஏற்றிக் கொண்டு திருச்சி சாலையில் சென்றுள்ளனர். இதைக் கவனித்த கிராமத்தினர், பழனிச்சாமிக்குத் தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். போலீசார் பாளையப்பாடிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று பழனிச்சாமியின் வீட்டுக்குப் போன் வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள்தான் சிறுவனை கடத்தி வந்துள்ளோம். நாங்கள் கூறும் பணத்தைக் கொண்டு வந்து தந்தால் விடுவோம் என்று கூறியுள்ளனர்.
எவ்வளவு பணத்தைத் தர வேண்டும்,எங்கு வந்து தர வேண்டும் என பழனிச்சாமி கேட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் ஒரு தொகையைக் கூறியுள்ளனர். மேலும், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டும். விழுப்புரத்தில் ரயில் நின்றுகிளம்பியதும் டார்ச் லைட்மூலம் சிக்னல்தருவோம். அப்போது பணத்தை வெளியில் தூக்கிப் போட வேண்டும் என்றும் அந்தக் கும்பல் கூறியுள்ளது.
இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் பணத்துடன் ரயில் ஏறினர். ஆனால் விழுப்புரத்தில் அதுபோல சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் பின்னர் அரியலூர் திரும்பினர்.
இந்த நிலையில் தொலைபேசியில் பேசிய நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை ஓரளவு கண்டுபிடித்த போலீஸார் எட்டு தனிப்படைகளை அமைத்தனர். இந்தப் படையினர் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கண்காணிப்பை முடுக்கி விட்டது.
திண்டிவனம் - புதுச்சேரி சாலையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கிளியனூர் சோதனைச் சாவடி அருகே ஒரு கார் மர்மான முறையில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் காரை மடக்கிப் பிடித்துப் பார்த்தபோது அதில் சிறுவன் தர்மதுரை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த இருவரைப் பிடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால் ஒருவன் மட்டுமே சிக்கினான். இன்னொருவன் ஓடி விட்டான்.
தப்பியோடிய நபரைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.