பிஎஸ்என்எல் வழங்கும் இலவச செம்மொழி காலர் டியூன்!
நெல்லை: செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு செம்மொழி காலர்டியூன் இலவசமாக அளிப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டிற்கு உலகம் முழுவதில் இருந்தும் பல லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செம்மொழி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் மாநாடாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் செம்மொழி பாடலை இலவச காலர் டியூனாக தங்கள் நிறுவன செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பினால் 24 மணி நேரத்தில் இப்பாடல் காலர் டியூனாக வந்து விடுகிறது. சாதாரணமாக நாம் ஒரு பாடலை காலர் டியூனாக வைக்க வேண்டுமெனில் முதல் முறை ரூ.45ம், அதன்பிறகு மாதம் தோறும் ரூ.30ம் செலுத்த வேண்டும்.
ஆனால், இந்த காலர் டியூன் இலவசமாக வழங்கப்படுகிறது.