ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் கல் பிதுங்கலால் விரிசல்-பீதி வேண்டாம்

இந்த ராஜகோபுரம் தான் ஆசியாவிலேயே உயரமான கோபுரமாகும். 13 நிலைகளை உடைய இந்த கோபுரத்தின் மொத்த உயரம் 236 அடி.
இந்த கோபுரத்தின் அடிப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து அது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு வந்தது.
சென்னை ஐ.ஐ.டி கட்டிட வடிவமைப்புத் துறை பேராசிரியர் மெகர் பிரசாத், உதவிப் பேராசிரியர் அருண் பிரசாத், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நாகமணி, தரமணி ஆராய்ச்சி மைய முனைவர் பரத்குமார், தேசிய நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சேகர், இந்து சமய அறநிலைய துறை தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் (திருப்பணி) ஹரிபிரியா ஆகியோர் அடங்கிய இந்தக் குழு 1 மணி நேரம் கோபுரத்தை ஆய்வு செய்தது.
இதையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா நிருபர்களிடம் பேசுகையில்,
ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரமானது இரட்டை சுவர் கட்டுமான அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டுமானத்தின் மீது (பழைய மொட்டை கோபுரம்) ஒரேயடியாக 214 அடி உயரத்துக்கு பெரிய கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் கல் பிதுங்கல் உண்டாகி விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பீதி அடையக்கூடிய வகையில் பாதிப்பு இல்லை.
கோபுரத்தில் இருந்து 10 மீட்டர் சுற்றளவிற்கு எந்தவித கட்டிடங்களும். ஆக்கிரமிப்புகளும் இருக்க கூடாது. கோபுரத்தில் செடி, கொடிகள் முற்றிலுமாக இருக்க கூடாது.
ஒரு கட்டிடம் கட்டும்போது தான் தண்ணீர் நண்பன். கட்டி முடிக்கப்பட்டு விட்ட பின்னர் தண்ணீர் தேங்கினால் அது கட்டிடத்திற்கு எதிரி. எனவே கட்டுமானத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் கோபுரங்களையும் ஆய்வு செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை ஆய்வு செய்துள்ளோம் என்றார்.
சென்னை ஐ.ஐ.டி. கட்டிட வடிவமைப்பு துறை பேராசிரியர் மெகர் பிரசாத் கூறுகையில்,
ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் தொடர்பான எங்களது ஆய்வறிக்கையை 15 நாட்களில் தமிழக அரசிடம் தாக்கல் செய்வோம். நாங்கள் இப்போது பார்வையிட்டதில் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை வந்து ஆய்வு செய்வோம் என்றார்.
ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், 13 நிலைகளுக்கு கீழே உள்ள கல் சாரத்தில் மட்டுமே விரிசல் உள்ளது. ஆய்வுக்குழு அறிக்கையில் கூறப்படும் குறைகள் அனைத்தும் 6 மாதங்களில் சரி செய்யப்படும் என்றார்.
நவீன முறையில் சீரமைக்க திட்டம்:
இந் நிலையில் விரிசல் விழுந்த கோபுரம் கிரெளண்டிங் அல்லது கெனடிங் என்ற நவீன முறையில் சரி செய்யப்படும் என்று தெரிகிறது.
ஒரு இடத்தில் துளையிட்டு அதில் சிமெண்ட்-மணல் கலவையை அதிவேக அழுத்தத்தில் செலுத்தி விரிசல்களை அடைப்பதே இந்த முறையாகும்.












Click it and Unblock the Notifications