செம்மொழி மாநாட்டில் கள் வழங்கும் போராட்டம் ஒத்திவைப்பு
கோவை: தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கோவை மாநாட்டிற்கு வந்துள்ளவர்களுக்கு கள் வழங்கும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று துவங்கியது. இதில் பஙகேற்பதற்காக கோவை சென்றுள்ள முதல்வரை தமிழ்நாடு கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் நல்லசாமி தலைமையில் ஒரு குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு வழக்கறிஞர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதியை தமிழகத்தில் கள் இறக்குவது குறித்து சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக உரிய நவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியும், மாநாட்டின் முக்கியத்துவம் கருதியும், அரசியல் சட்ட உரிமை மீட்பு அறப் போராட்டமான கள் விநியோகம், மாநாடு நடக்கும் ஐந்து நாட்கள் கைவிடப்படுகிறது என்றார்.
தமிழகத்தில் கள் இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என்றால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கள் விநியோகம் செய்யப்படும் என கள் இயக்கம் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications