கடன் வாங்கி தருவதாக சுய உதவிக்குழு பெண்களிடம் 10 லட்ச ரூபாய் மோசடி
நெல்லை: வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி சுய உதவிக்குழு பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாங்குநேரி தாலுகா மாவடி பகுதியில் ஒரு கும்பல் வங்கியில் கடன் வாங்கி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுவதாக எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி மோசடி கும்பலை கைது செய்தனர்.
இந்த கும்பலுக்கு மூளையாக மாவடிகுளத்து குடியிருப்பை சேர்ந்த கங்காதேவி என்ற ஜெனிபர் செயல்பட்டுள்ளார். கூடங்குளம் தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் என்பவர் களக்காடு கிளையில் ஏற்கனவே பீல்டு ஆபிசராக வேலை பார்த்தபோது ஜெனிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது.
பாலசுப்பிரமணியன் வங்கியில் வேலை பார்த்ததால் அவர் மூலம் பல நபர்களிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ஜெனிபர் பணம் வசூலித்துள்ளார். இதற்கு ஜெனிபரின் கணவர் ஷேக்பாபுவும் உடந்தையாக இருந்துள்ளார்.
இவர்கள் மூன்று பேரும் மாவடி பள்ளிக்கொண்டான் குடியிருப்பு மகளிர் சுய உதவிக் குழு தலைவி ரெஜினாளின் கீழ் செயல்படும் உறுப்பினர்கள் அனைவருக்கும் லட்சக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்காக ரூ.4 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதேபோல் பல்வேறு பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி முன்பணம் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.
ஆரல்வாய்மொழியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரிடம் வங்கியில் 5 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு முன்பணமாக ரூ.66 ஆயிரம் வசூலித்துள்ளனர். மேலும், பொன்ராஜை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக களக்காடு விஏஓ மற்றும் நாங்குநேரி தாலுகா அலுவலக முத்திரைகளை போலியாக தயாரித்து வருமான சான்றிதழ் கொடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் மாதாபுரத்தை சேர்ந்த தங்கப்பன் என்பவரிடம் அவரது மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 லட்சம் வசூலித்துள்ளனர். இவர்கள் மூவரும் பல்வேறு நபர்களிடம் ரூ.10 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இதுகுறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி ஜெனிபர், பாலசுப்பிரமணியன், ஷேக்பாபு ஆகியோரை கைது செய்தனர்.