திமுக, அதிமுக..15 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம்-ஓ.பன்னீர்செல்வம்
நாமக்கல்: தமிழகத்தில் 2011ம் ஆண்டில் 'புரட்சித் தலைவி அம்மாவின்' தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
கோவையில் வரும் 13ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து நாமக்கல் மாவட்ட அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம்,
தமிழ் வளர்ச்சிக்காகப் பாபடுவதாக கூறும் முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் டெல்லியில் சர்வதேச பல்கலைக்கழக தமிழ் ஆய்வுக்காக ஓர் இருக்கை அமைக்க ரூ. 50 லட்சத்தை 5 தவணைகளில் அனுப்புவதாக கடிதம் அனுப்பினார். இதை பல்கலைக்கழகம் நிராகரித்து விட்டது.
பின்னர், முதல்வராக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றதும் அதே கோரிக்கை மீண்டும் வந்தது. அப்போது ரூ. 50 லட்சத்தை ஒரே தவணையாகச் செலுத்தினார்.
திமுக ஆட்சியில் மக்கள் விரோதச் செயல்கள் அதிகரித்துவிட்டன. இதன் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் 12 இடங்களை அதிமுகவுக்கு வழங்கினர் மக்கள். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 15 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம். சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5,000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.
பல ஆண்டுகளாக பதவிகளை அனுபவித்துவிட்டு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களை எம்ஜிஆரின் ஆன்மா சும்மா விடாது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தின் முதல்வராக அம்மா அவர்கள் பொறுப்பேற்பது உறுதி என்றார் பன்னீர்செல்வம்.
நிகழ்ச்சியில் பேசிய அதிமுக தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன், வரும் டிசம்பருக்குப் பிறகு அதிமுக எழுச்சி பெறும். சட்டப் பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். வலுவான கூட்டணியை அமைக்க நமது தலைவி சிறந்த வியூகம் வகுத்துள்ளார். தேர்தல் பணியை சிறப்பாகச் செய்தாலே வெற்றி நிச்சயம் என்றார்.