தமிழக சட்டசபை தேர்தல்-கலெக்டர்களுடன் நவீன் சாவ்லா முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நவீன் சாவ்லா தலைமை வகித்தார். இதற்காக அவர் நேற்று இரவு டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். அவருடன் தேர்தல் ஆணையர் சம்பத்தும் உடன் வந்தார்.
சென்னை வந்ததும் விமான நிலையத்திலேயே ஒரு குட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் லலித் கலா அகாடமியில் தேர்தல் ஆணைய கண்காட்சியை நவீன்சாவ்லா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து டிரைடென்ட் ஹோட்டலில், ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
இதில் சாவ்லா உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), எஸ்.பிக்கள், காவல்துறை ஆணையர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புகைப்பட வாக்காளர் பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள், தேர்தலுக்காக ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள், வாக்குச்சாவடிகள் அமைப்பது போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நரேஷ்குப்தா, மாநில உள்துறை செயலாளர் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளார் சாவ்லா.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
எஸ்.எம்.எஸ்.மூலம் வாக்காளர் பட்டியல்
இதற்கிடையே, எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கல் உள்ளதை அறிய வகை செய்யும் எஸ்.எம்.எஸ் வசதியை நவீன் சாவ்லா தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரில் உள்ள தொகுதிகளுக்கான வசதிஇது. இதற்காக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தவசதி செயல்படுத்தப்படுகிறது.
இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் சென்னை வாக்காளர்கள், 'Vote" என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 51913 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
இதை அனுப்பிய சில விநாடிகளில் அவரது பெயர், தந்தை பெயர், தொகுதியின் பெயர், சீரியல் எண், பூத் விவரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.
எஸ்.எம்.எஸ்ஸுக்குப் பதில் வராவிட்டால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தமாகும்.
வாக்குச்சீட்டு முறை வராது-சாவ்லா
முன்னதாக நேற்று இரவு செய்தியாளர்களிடம் நவீன் சாவ்லா பேசுகையில்,
தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேர்தல் ஆணைய கண்காட்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறேன். பின்னர் தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் தனது ஆயத்தபணிகளை தொடங்கி விடும். தமிழகத்தில் மட்டுமின்றி தேர்தல் நடைபெற உள்ள பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் தனது பணியை தொடங்கி உள்ளது.
ஆயத்த பணி தொடர்பான முதல் கூட்டம் தான் தற்போது நடக்க உள்ளது. இதன் பின்னர் பல கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டங்களில் நான் கலந்துக் கொள்வேன். இது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைதான்.
மின்னணு வாக்குபதிவு முறையில் தவறு நடக்கிறது என கூறியவர்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு வந்து தவறுகளை நிரூபித்துக் காட்டவேண்டும் என கூறினோம். ஆனால் அதில் தவறு மற்றும் குறைகளை அவர்களால் நிரூபித்து காட்ட முடியவில்லை.
மின்னணு வாக்குபதிவு முறையை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு முறையில் முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் விஜயசாந்தியின் ஹைதராபாத் பேச்சு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் சாவ்லா.