போலீஸைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை : போலீஸாரைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வக்கீல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. போலீஸார் வக்கீல்களை பழிவாங்கும் நோக்கில் நடத்துகின்றனர். ரவுடிகளால் வக்கீல்கள் தாக்குப்படுகின்றனர். இதுகுறித்த வழக்குகளில் போலீஸார் சரிவர செயல்படுவதில்லை. கோவையில் வக்கீலை போலீஸார் தாக்கினர். இதில் போலீஸார் கைதுசெய்யப்படவில்லை. இதை கண்டித்து இன்றுகோர்ட் புறக்கணிப்பு செய்யப்படும் என தமிழக, புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை முதல் வக்கீல்கள் கோர்ட்டுகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 70 ஆயிரம் வக்கீல்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.