காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வு-கல்வீசிய 30 பேர் கைது
ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் பெருமளவில் இல்லை. அதேபோல செய்தித் தாள்களும் வரவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிளுக்குச் செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு பாஸ் வழங்க காஷ்மீர் நிர்வாகம் மறுத்ததோடு, வழங்கப்பட்டபாஸ்களையும் ரத்து செய்தது. மேலும் இரண்டு பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு பத்திரிக்கைகளை அனுப்புவதில்லை என்று பத்திரிக்கைகள் முடிவு செய்துள்ளன. இதனால் ஒரு நாளிதழ் கூட இன்று அங்கு வரவில்லை.
இதற்கிடையே, புலவாமா மாவட்டத்தில் ககபோரா பகுதியில் நேற்று மாலை ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேரும், 16 பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனர்.
சோபூர் பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசியவர்களை தொடர்ந்து போலீஸார் பிடித்து வருகின்றனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.