தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பங்காரு லட்சுமணன்: அஸ்ஸாம் பொறுப்பாளர் வருண் காந்தி
டெல்லி: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அகில இந்திய பாஜக தலைவரான பங்காரு லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பாஜக தலைவராக இருந்தபோது ராணுவத்துக்கு ஆயுதம் கொள்முதல் செய்ய உதவுவதாகக் கூறி தெகல்கா நிறுவனம் அனுப்பிய போலி ஆயுத வியாபாரிகளிடம் பல கோடி லஞ்சம் வாங்கினார். அதை தெகல்கா வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டதையடுத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். பாஜக தலைவராக நிதின் கட்காரி பொறுப்பேற்றதும் கட்சியில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவிகள் அளித்து வருகிறார்.
அந்த வகையில் பங்காரு லட்சுமணனுக்கு தமிழக தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பங்காரு லட்சுமணன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மூலம் தமிழகத்தில் தலித் வாக்குகளை கவரலாம் என்று கட்காரி நினைக்கிறார்.
அதே போல தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக உத்திரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக வருண் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெங்கையா நாயுடுவுக்கு டெல்லி, மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியும், வசுந்தரா ராஜேவுக்கு ஹரியானா மாநிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான அனந்த்குமார், பிகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும், முன்னாள் உத்தர்காண்ட் மாநில முதல்வரான பகத் சிங் கோஷ்யாரி ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக வினய் கட்யாரும், அந்த மாநில மேலிடப் பொறுப்பாளராக பத்திரிக்கையாளர் சந்தன் மித்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யஷ்வந்த் சின்ஹாவிடம் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பும், நஜ்மா ஹெப்துல்லாவிடம் டையு-டாமன் யூனியன் பிரதேச பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கலாச்சாரப் பிரிவின் தலைவராக நடிகை ஹேமமாலினியும், பாஜக பெண்கள் பிரிவின் தலைவியாக கருணா சுக்லாவும், சிறுபான்மைப் பிரிவுத் தலைவராக ஜே.கே.ஜெயினும் நியமிக்கப்பட்டுள்ளனர்.