காவல் நிலையங்களை தாக்க மாவோ நக்சலைட்கள் சதி திட்டம்: விசாரணையில் திடுக் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் காவல் நிலையங்களைத் தகர்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவில் நிலம்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்கத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அம்மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சினிக், சசிதரன் என்ற 2 நக்சலைட்டுகளை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் தங்கள் இயக்கத்துக்கு ஏராளமான ஆட்களை சேர்த்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இவர்கள் ஆட்களை தேர்வு செய்துள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தீவிர பயிற்சியும் அளித்துள்ளனர். மேலும், அவர்கள் காவல் நிலையங்களை தாக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
நிலம்பூரில் ரயிலின் பிரேக்கை துண்டித்த சதியிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்கு பிறகு இருவரும் நிலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications