ப.சிதம்பரம் முன்னிலையில் காங்.கில் நாளை சேருகிறார் செல்வப் பெருந்தகை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை, நாளை காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நம்பர் 2 தலைவராக இருந்தவர் செல்வம். எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு புகார்களைக் கூறியது பகுஜன் சமாஜ். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வம் காங்கிரஸில் இணைய விரும்பினார்.இதுதொடர்பாக டெல்லி சென்று குலாபம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினார்.
ஆனால் செல்வத்தின் குற்றப் பின்னணி குறித்த பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அவரை சேர்ப்பது குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து செல்வம் காங்கிரஸில் இணைவது தடைபட்டது.
தற்போது செல்வத்தை கட்சியில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டி விட்டதாம். இதையடுத்து நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் செல்வம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும். அதுவே அந்த கட்சியில் இணைவதற்கு முக்கிய காரணமாகும். மேலும் அம்பேத்கரை பெருமைபடுத்திய கட்சியும் அதுதான்.
ஜெகஜீவன்ராம், மீரா குமார், கே.ஆர். நாராயணன் போன்ற தலித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி பெருமைப்படுத்தியுள்ளது. மத்திய அமைசத்சர் ப.சிதம்பரத்தின் கல்விக்கடன் திட்டம் மூலம் நான்கு இந்தியர்களில் ஒரு தமிழர் பயன் பெறுகிறார்.
தலைவர் தங்கபாலு தலைமையில், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் நானும் ஆதரவாளர்களும் நாளை இணைகிறோம். அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார் செல்வம்.
நாளை காலை 10 மணிக்கு இந்த இணைப்பு விழா நடைபெறுகிறதாம்.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் கட்சியில் இணைவதாகவும், ப.சிதம்பரத்தைப் பாராட்டிப் பேசியிருப்பதாலும், காங்கிரஸின் ப.சிதம்பரம் கோஷ்டியில் செல்வம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வம். அதிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட பதவியை விடவில்லை. இப்போது காங்கிரஸிலும் இணையப் போகிறார். நாளையாவது ராஜினாமா குறித்து அறிவிப்பாரா என்பது தெரியவில்லை.