கல்மாடிக்கு நெருக்கமானவரை காமன்வெல்த் போட்டிக் குழுவிலிருந்து நீக்க உத்தரவு
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து டி.எஸ்.தர்பாரியை நீக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுஅமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தர்பாரி, கல்மாடியின் மிக நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் என்ற வரிசையில் சேரும் அளவுக்கு காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்ட நிதி முறைகேடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுதவிர வெட்டிச் செலவு பல லட்சம் பணத்தையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் வீணடித்துள்ளது. இதுவும் மக்களிடையே பெரும் வயிற்றெரிச்சலுக்கு வித்திட்டுள்ளது.
இந்த நிலையில் கல்மாடியி்ன் மிக நெருங்கிய உதவியாளரான தர்பாரியை தூக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கும், காமன்வெல்த் போட்டி குழுவுக்கும் விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவின் இணை இயக்குநராக இருந்து வருகிறார் தர்பாரி. இவர் மீது ஏற்கனவே சுங்க வரி ஏய்ப்பு வழக்கு ஒன்று கடந்த ஆறு மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
துபாயிலிருந்து வைரத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்திருப்பதாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.
காமன்வெல்த் போட்டிக்கான க்வீன்ஸ் பேட்டன் ஓட்ட நிகழ்ச்சி தொடர்பாக லண்டனைச் சேர்ந்த ஏஎம் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தேவையில்லாமல் பெரும் தொகையை கொடுத்தது தொடர்பான சர்ச்சையிலும் தர்பாரி சிக்கினார்.
இந்த சர்ச்சை தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே கல்மாடி கூறியிருந்தார். இந்த நிலையில் தர்பாரியை நீக்குமாறு கல்மாடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டி குழுவில் கல்மாடிக்கு அடுத்து அதிக சக்தி வாய்ந்த நபராக தர்பாரி கருதப்படுகிறார்.
தர்பாரியை குழுவில் சேர்க்க ஆரம்பத்திலிருந்தே பிற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதையும் மீறி அவரை சேர்த்தவர் கல்மாடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
போகிற போக்கைப் பார்த்தால் ஐபிஎல் ஆணையர் லலித் மோடிக்கு ஏற்பட்ட நிலை கல்மாடிக்கும் ஏற்படலாம் என விளையாட்டு வட்டாரத்தில் பேசப்படுகிறது.