பெல்காம்-காமன்வெல்த்: நாடாளுமன்றத்தில் அமளி; கர்நாடக-மகாராஷ்டிர எம்பிக்கள் மோதல்
டெல்லி: பெல்காம் மாவட்டம் தொடர்பாக கர்நாடகம்- மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இன்று இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
காலை மக்களவை தொடங்கியதும், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும், கட்சி வேறுபாடியின்றி பெல்காம் மாவட்டம் மராட்டியத்திற்கே சொந்தம் என்று கோஷம் எழுப்பினர். இதில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பேனர்களையும் காட்டியபடி அவையல் மையப் பகுதிக்கு வந்து கோஷம் போட்டனர்.
அவர்களுக்குப் போட்டியாக கர்நாடக பாஜக எம்.பிக்கள் எதிர் கோஷம் போட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
அதே போல ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களால் பெரும் அமளி ஏற்பட்டு அவை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி அரசு தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒதுக்குவதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications