காஷ்மீர்: பான்-கி-மூன் பெயரில் பொய் இ-மெயில் அனுப்பிய பாக்.கை சேர்ந்த ஐ.நா செய்தி தொடர்பாளர்
காஷ்மீரில் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றனர். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பலர் பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் காஷ்மீர் நிலவரம் மிகவும் கவலையளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் இந்திய அரசும் சம்பந்தப்பட்டவர்களும் நிதாதனத்தை கையாள வேண்டும் என்றும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாகவும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பான்-கி-மூன் பெயரில் ஐ.நா. செய்தியாளர்களுக்கு இ-மெயில் வந்தது.
மூனின் இந்தக் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவி்த்தது. தீவிரவாதிகளை ஆதரி்ப்பதை பாகிஸ்தான் கைவிடாத வரை காஷ்மீர் தொடர்பாக அந்த நாட்டுடன் பேசுமாறு யாரும் இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்று வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இதையடுத்து அப்படி ஒரு மெயிலை தான் அனுப்பவே இல்லை என்று பான்-கி-மூன் மறுத்துள்ளார். அவரது பெயரில் ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலக செய்தித் தொடர்பாளரான பர்ஹான் ஹக் தான் இந்த மெயிலை அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவர் தான் இந்த மெயிலை அனுப்பியதாக பான்-கி-மூன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மற்றபடி காஷ்மீ்ர் நிலவரம் குறித்து தான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் மூன் விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் கண்டதும் சுட உத்தரவு:
இந் நிலையில் காஷ்மீரில் கலவரம் தீவிரமாகி வருகிறது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் நேரடியாக மோதி வருவதால் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று நடந்த மோதலில் போலீஸார் சுட்டதில் 5 பேர் பலியாயினர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 30 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிக்கு கூடுதலாக 2,000 துணை ராணுவப் படையினரை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப கூடுதல் படைகள் அனுப்பப்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே காஷ்மீ்ர் நிலவரம் மிகவும் கவலை தருவதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வேதனை தருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மத் குரேஷி கூறியுள்ளார்.
காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற பாகிஸ்தான் துணை நிற்கும் என்றும், அந்த மக்களுக்கு அரசியல் ஆதரவையும், சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்குத் தேவையான ராஜீயரீதியிலான ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும் என்றார்.
கலவரம் நீடிப்பு-வெளிமாநில மக்கள் மீது தாக்குதல்:
காஷ்மீரில் மத்திய அரசு அலுவலகங்களில் வெளி மாநில மக்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
பல இடங்களில் போராட்டகாரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உயிருக்கு பயந்து போன அவர்கள் காஷ்மீரில் இருந்து குடும்பத்தோடு வெளியேறி வருகின்றனர்.
சோபுர், புட்காம் ஆகிய இடங்களில் போராட்டங்காரர்கள் ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனவே அங்கு பணியாற்றும் வெளி மாநில ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி ஜம்மு நகருக்கு வந்துள்ளனர்.