தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் மோதல்-7 கிராமங்களில் பதற்றம்
ஏரல்: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மோதலால் 7 கிராமங்களில் தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஏரல் பெருங்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் சாயர்புரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு பேரூந்தில் செல்வது வழக்கம்.
இதே பேரூந்தில் அருகிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இதில் கல்லூரியில் ஏற்பட்ட முன்விரோதத்தினால் பெருங்குளம் மாணவர்களுக்கும், பண்டாரவிளை மாணவர்களுக்கும் இடையே பேரூந்தில் வைத்து மோதல் ஏற்பட்டு இரு தரப்பும் மோதி கொண்டதில் பண்டரவிளை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பண்டராவிளையை சேர்ந்த 4 மாணவர்களை கைது செய்த ஏரல் போலீசார் மேலும் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
கல்லூரி மாணவர்கள் மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி பண்டாரவிளை, பண்னைவிளை, புதூர், வன்னியனுர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கொதித்தெழுத்து ஊரின் ஆலய மணிகளை அடித்து மக்களை திரட்டி பண்டாவிளையில் சாலையில் சுமார் 1000 பேர் திரண்டு வந்து அமர்ந்து பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் பதட்டம் நிலவுவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊரே வெறிச்சேடி காணப்படுகிறது.