ஜாதிவாரி சென்ஸஸ் நிச்சயம்: மத்திய அரசு
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. ஆனால், காங்கிரசிலும் பாஜகவிலும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அதில் உள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் ஜாதிவாரி சென்ஸஸை எதிர்த்து வரும் நிலையில் பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் அதை ஆதரிக்கின்றனர்.
இந் நிலையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி சென்ஸஸ் குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி ஆகியவை இன்று கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாகப் பேசினார். இன்றுடன் மக்களவை கூட்டத் தொடர் முடிவடையவுள்ள நிலையில், ஜாதிவாரி சென்ஸஸ் குறித்து மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதிப்பது நல்லதல்ல என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது பிற்படுத்தப்பட்ட மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாகவும் கூறினார்.
அவருக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜகவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் முக்கியத் தலைவரான கோபிநாத் முண்டே ஆகியோரும் பேசினர்.
இதற்கு விளக்கம் அளித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரத்தை சேர்ப்பது எனறு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. இதற்கு அமைச்சரவை அனுமதி தர வேண்டும். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி தரப்படும், இது ஒரு பார்மாலிட்டி தான். மற்றபடி ஜாதியை சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்றார்.
வீடு வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும்போது ஜாதி விவரத்தையும் சேர்க்க பிரணாப் தலைமையில் அமைக்கப்பட்ட 11 அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க முடியவில்லை:
இந் நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பது சாத்தியமில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் அவர் கூறுகையில், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளின் வரவு செலவு விபரங்கள் பற்றி வேறு எந்த நாட்டுக்கும் தெரிவிக்கக் கூடாது என்று அந்நாட்டில் கடுமையான சட்டம் உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ளது. எனவே, அங்கு முதலீடு செய்துள்ள இந்தியர்களின் கருப்பு பண விவரத்தை அறிவது சாத்தியமன்று. கடந்த 1945ம் ஆண்டு ஜெர்மனியின் நாஸி தலைவர்களின் வங்கி கணக்குகளை மட்டுமே இதுவரை சுவிஸ் வங்கிகள் வழங்கியுள்ளது.
இது போன்று 1945ம் ஆண்டிற்கு முன்போ அல்லது பின்போ நடந்ததே இல்லை. எனவே, அங்கு முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்டு கொண்டு வருவது என்பது தற்போதைக்கு முடியாத ஒன்றாகும்.
ஆனால் ஜெர்மனி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்து மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.