கோவிந்தராஜன் கமிட்டி கட்டண நிர்ணயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்யலாம்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபப்ட்ட நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசுக்குப் பரிந்துரைத்தைது. இதை ஏற்றுக் கொண்டு அரசு அதை அறிவித்தது. ஆனால் அதை தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்து விட்டன. மேலும், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி இந்தப் பிரச்சினையால் நேரடியாக பாதிக்கப்படும் பொதுமக்கள் தரப்பு கோரிக்கையை கேட்காமல், கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை இந்த ஆண்டு அமலாக்க முடியாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். அரசுத் தரப்பிலும் இதுவரை இந்த விவகாரகத்தில் உறுதியான நடவடிக்கை எதையும் காணவில்லை.
இந்த நிலையில், இடைக்கால உத்தரவுக்கு தடை கேட்டு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில்,
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தினால் இந்த சங்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த வழக்கை நீதிபதி ஏற்றுக் கொண்டு, அவர்கள் கோரியபடி, கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
இந்த கட்டண நிர்ணயத்தால் பள்ளிகளுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமே தவிர, பள்ளிகளின் சங்க கூட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்படாத கூட்டமைப்பின் மனு, சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. கூட்டமைப்பை ஒரு தனியார் பள்ளியாக கருத்தில் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் உண்மையான பாதிப்பு, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும்தான். ஆனால் அவர்களை யாரும் வழக்கில் சேர்க்கவில்லை. அவர்களின் கருத்தைக் கேட்காமலேயே அந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
எனவே கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கும், அதை அமல்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு தடை விதித்தும் தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அப்பீல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.