பிஎப் வட்டி உயர்வுக்கு வரிவிதிப்பு ரத்து! - மத்திய அரசு முடிவு
டெல்லி: தொழிலாளர் பிஎப் (சேமநல நிதி) க்கான 9.5 சதவீத வட்டிக்கு, வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தொழிலாளர் சேமநல நிதி திட்டத்தில் ஏறத்தாழ 6 கோடி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சேமநல நிதிக்கு செலுத்தும் தொகைக்கு, கடந்த 5 ஆண்டுகளாக, மத்திய தொழிலாளர் சேமநல நிதி ஆணையம் 8.5 சதவீத வட்டி வழங்கி வந்தது.
2010-11-ம் நிதி ஆண்டுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 8.5 சதவீத வட்டியை 9.5 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று, சமீபத்தில் மத்திய தொழிலாளர் சேமநல நிதி ஆணையம் அறிவித்தது.
ஆண்டு தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2010-11-ம் ஆண்டுக்கும் 8.5 சதவீத வட்டிக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய வருமானவரித் துறை ஏற்கனவே முடிவு செய்து இருந்தது. இதற்கான உத்தரவு கடந்த 1-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட 1 சதவீத வட்டிக்கு மட்டும் வரி கட்ட வேண்டி வரும் என்று கூறப்பட்டது. இது தொழிலாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த ஒரு சதவீத வட்டிக்குரிய தொகைக்கும் வருமான வரி விலக்கு அளிக்க, வருமான வரி இலாகா முடிவு செய்து இருக்கிறது. இதற்காக கடந்த 1-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாறுதல் செய்து, இன்னும் 10 நாட்களில் வருமான புதிய அறிக்கையை வெளியிட உள்ளது.
எனவே சேமநல நிதி வட்டி முழுமைக்கும் இனி வரியே கிடையாது என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications