ஆஸி. போலீஸாரின் இனவெறி இமெயில்-தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: இரண்டு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் இந்தியர்களை மிகவும் மோசமாக விமர்சித்து பரிமாறிக் கொண்ட இமெயில் தகவல் குறித்து இந்தியா கடும் கண்டனமும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைத் தெரிவித்ததோடு அந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட இமெயில் குறித்த விவரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் இந்திய பயணி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து நகைச்சுவையாக இருவரும் பேசியுள்ளனர். அதாவது மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை குறிப்பிட்டு, இப்படி மின்சாரம் பாய்ச்சினால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அந்த இரு இனவெறி போலீஸாரும் கூறியுள்ளனர்.
இந்த இனவெறிப் பேச்சுக்கு இந்தியா கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
இந்த இமெயில் விவகாரம் வெளியானத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் தொடர்பாக இதுபோன்ற பயங்கரமான கருத்துக்களை, ஆஸ்திரேலியர்கள், குறிப்பாக போலீஸார் பரிமாறிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கவலையான விஷயமாகும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
எந்த சமூகத்திலும் இதுபோன்ற விஷமப் போக்குக்கு இடம் கிடையாது. இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கியிருப்பதாக அறிகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதுதொடர்பான நடவடிக்கைளை ஆஸ்திரேலியா எடுக்கும் என நம்புகிறோம்.
மேலும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பாதுகாப்பு குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் கிருஷ்ணா.
இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸ் கூறுகையில், இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர்களில் ஒருவர் போலீஸ் சேவையில் தற்போது இல்லை. இன்னொருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அரசும், விக்டோரிய அரசும், விக்டோரிய காவல்துறையும் இந்த விஷமப் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த இமெயில் பேச்சு மிகவும் அவதூறானது, கடும் கண்டனத்துக்குரியது. இது ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது என்றார்.
முன்னதாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வந்த பீட்டர் வர்கீஸிடம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு உரிய விளக்கத்தை அளிக்குமாறும் அவர் பணிக்கப்பட்டார்.