விஜயகாந்த் எச்சரிக்கை எதிரொலி-தேமுதிக பெயரில் நிதி வசூல் செய்த 3 பெண்கள் கைது
சென்னை : தேமுதிக பெயரைப் பயன்படுத்தியும், எனது பெயரைப் பயன்படுத்தியும் சிலர் மோசடியாக நிதி வசூல் செய்து வருவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் எச்சரித்திருந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக 3 பெண்களைப் போலீஸால் கைது செய்துள்ளனர்.
தேமுதிகவில் சேர்ந்தால் விஜயகாந்த் கடன் தருவார் என்று கூறிசிலர் மோசடியாக நிதி வசூல் செய்து வருவதாகவும், அவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறி விஜயகாந்த் நேற்று ஒருஅறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பெண்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் 62-வது வட்ட பகுதி தே.மு.தி.க. துணைச் செயலாளராக இருப்பவர், ஆயிஷா. வில்லிவாக்கம் அன்னை இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி, விஜயகுமாரி.
ஆயிஷா, விஜயகுமாரியை சந்தித்து கொளத்தூர் பகுதியில் தே.மு.தி.க. மகளிர் அணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும்படி தலைமை கழகம் வழங்கிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி இருந்தார்.
அந்த படிவங்களை பெற்றுக்கொண்ட விஜயகுமாரி, அந்த பகுதியில் திருப்பதி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சாந்தி (45), குமரேசன் என்பவருடைய மனைவி பவானி (38) ஆகிய இருவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு மூன்று பேரும் மாதவரம், கொளத்தூர், ராஜமங்கலம் ஆகிய பகுதிகளில் பெண்களை அணுகி, மகளிர் அணியில் இணைந்தால் தலா ரூ. 35,000 கடன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கடனை தவணையாக திருப்பித் தரலாம் என்றும் கூறியுள்ளனர்.
இப்படிச் சொல்லி சொல்லியே கிட்டத்தட்ட 500 பெண்களிடம் தலா ரூ. 100, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதைக் கொடுத்த பெண்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வந்து கடன் கேட்டபோது அப்படியெல்லாம் நாங்கள் எதையும் தரவில்லையே என்று கூறியுள்ளனர். இதையடுத்து வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் யுவராஜை அணுகி இப்பெண்கள் முறையிட்டனர்.
இந்த நிலையில்தான் விஜயகாந்த் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து யுவராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில், சாந்தி, பவானி, விஜயக்குமாரி ஆகியோர் சிக்கினர்.