தயாளு அம்மாளின் அண்ணி படம்-திறந்து வைத்தார் கருணாநிதி
திருவாரூர் : திருவாரூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மனைவி தயாளு அம்மாளின் அண்ணியார் படத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் ஆவார்.
தட்சிணாமூர்த்தியின் மனைவி தனம் அம்மாள் கடந்த மாதம் 23-ந்தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கோவில் திருமாளத்தில் காலமானார். அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் கலந்து கொள்ள கருணாநிதி சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர், வழியாக சிதம்பரத்துக்கு நேற்று இரவு வந்தார். அங்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம், மயிலாடுதுறை வழியாக கோவில் திருமாளத்துக்கு வந்தார். அங்கு, தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர் கருணாநிதியை வரவேற்றனர்.
பின்னர் தனம் அம்மாளின் உருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், வீட்டு முன்பு தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்தார்.
பின்னர் திருவாரூருக்கு கருணாநிதி காரில் சென்றார். அங்கு பயணியர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார்.
ஓய்வை முடித்துக் கொண்ட பின்னர் மாலையில் கார் மூலம் நாகை செல்கிறார். அங்கு காடம்பாடியில் 6 மணிக்குக் தொடங்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
காடம்பாடியில் நாகை மாவட்ட கலைஞர் அறிவாலயத்துக்கும் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு திருவாரூரில் தங்குகிறார் கருணாநிதி. பின்னர் நாளை காலை கார் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications