பிற கட்சிகளுக்கு உதவுவதை விட்டு விட்டு முதல் இயக்கமாக காங். வர வேண்டும்-வாசன்
திருச்சி: பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்.
திருச்சி பொதுக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசுகையில்,
சென்னையில் கடலை பார்த்து இருக்கிறோம். திருச்சியில் சீறிவரும் காவிரியை தான் பார்த்து இருக்கிறோம். இன்று கடலை பார்க்கிறோம். இது வருகிற நாட்களில் காங்கிரஸ் பேரியக்கம் முதல் இயக்கமாக வருவதற்கு அடித்தளமான கூட்டம். மலைக்கோட்டையில் லட்சக்கணக்கானோர் கூடி இருப்பதால், நமது லட்சியத்தை அடையும் கூட்டம்.
நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிற கூட்டம். காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் கூட்டம். லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களே, நிர்வாகிகளே, மத்திய அமைச்சர்களே, உள்ளாட்சி அமைப்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
4-வது முறையாக காங்கிரசில் தலைவராக தேர்வாகி, முதல் முறையாக தமிழகத்துக்கு வந்து உள்ளீர்கள். உங்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மட்டும் பார்க்கவில்லை. இந்தியாவின் பாதுகாவலராகவே பார்க்கிறோம்.
ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக மட்டும் பார்க்கவில்லை. வருகிற காலத்தில் புதிய இந்தியாவை உருவாக்கும் ராஜீவ்காந்தியின் மறுபிறப்பாக பார்க்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக 50 சதவீத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்துக்கு வந்து உள்ளார்கள்.
திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுடன் இந்த இயக்கத்தில் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சிக்குரியது. அவரை வரவேற்று ஆதரவளிப்போம். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நல்ல அரசாக செயல்படும் மத்திய அரசு வருகிற நாட்களில் இந்தியாவை வல்லரசாக மாற்றும். கிராமங்கள் தோறும் நமது திட்டங்கள் அனைத்தும் பறைசாற்றப்பட வேண்டும்.
காங்கிரஸ் பேரியக்கம் 43 வருட காலம் ஆட்சி பீடத்தில் இல்லாவிட்டாலும், இன்றும் உயிரோட்டமான இயக்கமாக இருப்பதற்கு தொண்டர்களாகிய நீங்கள் தான் காரணம். நமது கட்சிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பிறகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வர வேண்டும். அதற்கு அடிப்படையில் காமராஜரின் உழைப்பும், மூப்பனாரின் வழிகாட்டுதலின்படி வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications