கர்ப்பிணி சாவு-2 டாக்டர்கள் சஸ்பெண்ட்: சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
தென்காசி: கவனக்குறைவால் கர்ப்பிணியின் சாவுக்கு காரணமாய் இருந்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் 24-ம் தேதி புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்நத ஜமீலா பீவி பிரவசத்திற்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் ஜமீலா பீவியும், குழந்தையும் இறந்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட், தமுமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதையடுத்து இறந்த ஜமீலா பீவியின் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதியின் உத்தரவுபடி கலெக்டர் ஜெயராமன் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். இதைத் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்த டாக்டர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார நலத்துறை கண்காணிப்பாளர் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
அதன்பேரில் கடந்த 4-ம் தேதி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் கற்பகராஜ், சித்திரா சங்கரேஸ்வரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கடிதம் தென்காசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.