ரவிசங்கர் மீதான வழக்கு நவ 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சிறையில் அடைப்பு
நெல்லை: எம்.எல்.ஏவாக இருந்து பின்னர் கொள்ளையனாக மாறிய ரவிசங்கர் மீதான வழக்கு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர், எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்தார். அப்போது வங்கியில் ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி வணிக புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார் வங்கி தலைவர் ரவிசங்கர் உள்பட 4 பேர் மீது 3 வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி போலீசார் ரவிசங்கரை விசாரணைக்கு ஆஜர்படுத்த நெல்லைக்கு கொண்டு வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவானார். இதனால் அவரது வழக்கு நிலுவையில் இருந்தது. மற்றவர்கள் மீதான வழக்கு முடிந்தது.
இந்நிலையில் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் போலீசில் சிக்கினார். கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் கடந்த வாரம் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்காக புழல் சிறையி்ல் இருந்து ரவிசங்கரை அழைத்து வந்து நெல்லை 2வது மாஜிஸ்திரேட் ராபின்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது சாட்சியங்கள் அடிப்படையில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதன்பின்னர் வழக்கு வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. போலீசாரிடம் தப்பி சென்ற வழக்கில் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரவிசங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி ராஜேஷ் கண்ணன் வரும் 24-ம் தேதி வரை ரவிசங்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications