திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா துவங்கியது : நவ. 21ல் மகா தீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. வரும் 21-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
திருவண்ணாமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். தான் என்ற அகந்தையை அழிப்பதற்காக சிவபெருமான் திருவண்ணாமலையில் அக்னி மலையாக தோன்றியதாக ஐதீகம். ஆகையால் மக்கள் மலையையே சிவபெருமானாக பாவித்து பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி மலையாகத் தோன்றியதால் அங்கு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் காரத்திகை தீப திருவிழா நேற்று துவங்கியது. இது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அணிவித்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.
இதைத் தொடர்ந்து விநாயகர், முருகர், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர்.
கொடியேற்றமத்தைத் தொடர்ந்து கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமான வாகனங்களில் மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், அதிகார நந்தி, ஹம்சம், சின்ன ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் வரும் 17-ம் தேதியும், தேரோட்டம் 18-ம் தேதியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.