ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு-25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூர் தனி கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த வழக்கு.
பலமுறை இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் வாய்தா வாங்கப்பட்டுள்ளது. கடைசியாக, வழக்கு ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழைகள் இருக்கிறது. எனவே அதை ரத்து செய்து விட்டு மீண்டும் மொழிபெயர்க்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை முடிந்து, தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டில் சாட்சிகள் மறுவிசாரணை தொடங்கியது. அப்போது தனிக்கோர்ட்டில் ஒருவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பெங்களூர் தனிக்கோர்ட் நேற்று மீண்டும் கூடியது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் அரசு வக்கீல் ஆச்சார்யா, ஜெயலலிதா வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது, ஜெயலலிதாவின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளது. எனவே இங்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா வக்கீல் கோரினார்.
இதையடுத்து 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications