காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக புகார்-விசாரணை கமிஷனை நிராகரித்தது
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சிக் காலத்தில்தான் பெரும முறைகேடுகள் நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. 50,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் ரத்தன் டாடா குற்றம் சாட்டியிருந்தார்.
(பாஜக ஆட்சி ரிலையன்ஸ் செல்போன் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது)
இதனால் பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் டாடா கோரியுள்ளார்.
இந் நிலையில் டாடாவுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவத்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவிக்க ரத்தன் டாடா ஒன்றும் நீதிபதி கிடையாது. என்ன நடந்தது என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தொலைத் தொடர்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன், தனக்கு சொந்தமாகவும் தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ளது என்பதை டாடா உணர்ந்து பேச வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் தொலைத் தொடர்பு கொள்கைகளால் ஆதாயம் அடைந்தவர்கள் (டாடாவை சொல்கிறார்) பேசும் பேச்சை பொதுமக்கள் மதிக்க மாட்டார்கள்.
தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி ஏற்படக் காரணமே பாஜக தான் என்றார்.
நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டி விசாரணை-நிராகரித்த பாஜக:
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்தே விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியை ஏற்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையி்ல், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது அவைக்கு வெளியே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள அவை உரிமையை மீறும் செயலாகும்.
அரசின் இந்த முடிவை பாஜக முற்றிலுமாக நிராகரிக்கிறது. இது நீதிமன்ற விசாரணை அல்ல. விசாரணை கமிட்டிதான். இதை ஏற்க முடியாது என்றார்.
மார்க்சிஸ்டும் எதிர்ப்பு:
அதே போல இந்த விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பது பிரச்சனையை அப்படியே நீர்த்துப் போக செய்யும் முயற்சி தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இந்த நீதி விசாரணை கமிட்டிக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. இதை நாடாளுமன்ற கூட்டுக் குழு தான் விசாரிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றார்.