மீண்டும் பாஜகவில் சேர்கிறார் உமா பாரதி: உபியில் இருந்து போட்டியிட முடிவு
டெல்லி: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் உமா பாரதி மீண்டும் கட்சியில் சேரப்போவதாகவும், உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் மூத்த பாஜக தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அத்வானி தனது பிளாக்கில் எழுதியிருந்ததாவது,
உமா என்னிடம் பேசினார். எனது அறிவுரையை ஏற்று அவர் உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தவிருக்கிறார். அவர் உத்தர பிரதேசத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார் என்று அவர் எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு பாஜக தலைவராக நிதின் கட்காரி பொறுப்பேற்றபோது ஜஸ்வந்த் சிங் மற்றும் உமா பாரதியை மீண்டும் கட்சியில் சேர்க்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்று அத்வானி கூறினார். மேலும் நிதின் கத்காரியுடனும் உமா பாரதி பேசியிருந்தார். அப்போது, மீண்டும் அரசியல் களத்திற்கு திரும்ப சற்று அவகாசம் தருமாறு அவர் கத்காரியிடம் கோரியிருந்தார் என்றும் அத்வானி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு உமா பாரதி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர் தனிக் கட்சி ஆரம்பித்தார். ஆனால் அது போணியாகவில்லை. இதனால் மீண்டும் பாஜகவுக்குத் திரும்ப தீர்மானித்தார்.
உமா பாரதி மீண்டும் பாஜகவில் சேர்வது பற்றி கடந்த சில மாதங்களாகவே கணிப்புகள் இருந்து வந்தன.
சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் தந்தையின் இறுதிச் சடங்குகள் கடந்த மாதம் ராய்பூரில் நடந்தது. அதற்கு அத்வானியுடன் உமா பாரதியும் சென்றிருந்தார். மேலும், அத்வானி சோம்நாத் கோவிலுக்குச் சென்றபோதும் உமா பாரதி அவருடன் சென்றிருந்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் உத்தரபிரதேசத்தில் பாஜக பலம் குறைந்து காணப்படுகிறது. 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தகளில் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்றார். இந்த நிலையில் உமாபாரதி மீண்டும் கட்சிக்குத் திரும்புவதால், மக்களவைக்கு 80 அமைச்சர்களை அனுப்பும் மாநிலத்தில் பாஜகவுக்கு பலன் கிடைக்கலாம் என அக்கட்சி நம்புகிறது.
இதற்கிடையே, ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு கவிழாது, இடைத் தேர்தல் வராது என்று அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழந்து விரைவில் தேர்தல் வரும் என்பது உண்மையில்லை. வெற்றி நிச்சயம் இல்லை என்பது தெரிந்து எந்த அரசும் முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்பாது. அரசை கலைக்கும் பேச்சே அமைச்சர்களுக்கு பீதி அளிக்கிறது. ஜேபிசி விசாரணை குறித்து அனைத்து எதிர்கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றியின் தூண்டுதலினால் தான் வாஜ்பாய் கடந்த 2004-ம் ஆண்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காரணம் அதீத நம்பிக்கை தான் என்று அவர் கூறினார்.