மைசூர் ஏரிக்குள் டெம்போ கவிழ்ந்து திருமண கோஷ்டியினர் 28 பேர் பலி
மைசூர்: மைசூர் அருகே உள்ள ஏரியில் திருமண கோஷ்டியினர் வந்த டெம்போ மூழ்கியது. இதில் 28 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா அரலகுப்பே மற்றும் கட்டேரி கிராமத்தை சேர்ந்த 34 பேர் ஒரு டெம்போவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் நடந்த திருமண விழாவிற்குச் சென்றனர்.
திருமணம் முடிந்த பிறகு நேற்று மாலை சொந்த ஊருக்கு அதே டெம்போவில் திரும்பிக் கொண்டிருந்தனர். மைசூர் விமானநிலையம் அருகே வந்து கொண்டிருக்கையில் ஒரு பேருந்தை முந்தும்போது டெம்போ அங்கிருந்த ஏரியில் கவிழ்ந்தது. இதில் டெம்போவில் பயணம் செய்தவர்களில் 28 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிர் இழந்தனர். இறந்தவர்களில் 25 பெண்கள், 11 மாத குழந்தையும் அடக்கம்.
5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களை மைசூர் கே. ஆர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கர்நாடக மருத்துவ அமைச்சர் எஸ். ஏ. ராமதாஸ் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications