குஜ்ஜார்களின் போராட்டத்தால் ராஜஸ்தானில் போக்குவரத்து பெரும் பாதிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் விமானப் போக்குவரத்து, ரயில், சாலைப் போக்குவரத்து என அனைத்து வகை போக்குவரத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ராஜஸ்தானின் முக்கிய சமூகமான குஜ்ஜார் சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மீண்டும் பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
முக்கிய ரயில் பாதைகளை தகர்த்து அங்கேயே முகாமிட்டு போராடி வருகின்றனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் மறித்து மறியல் போராட்டத்தை நடத்தி வருவதால்சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளையும் அவர்கள் முடக்கியுள்ளதால் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களாக நடந்து வரும் இந்தப் போராட்டம் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு குஜ்ஜசார் சமுதாயத் தலைவர் கர்னர் பைன்ஸ்லா தலைமை தாங்கி நடத்தி வரகிறார். இற்கிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு பைன்ஸ்லாவை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அழைத்துள்ளது. ஆனால், பிலுபுராவில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் இடத்தில் உட்கார்ந்து பேச வேண்டும் என பைன்ஸ்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அரசுத் தரப்பு குழப்பமடைந்துள்ளது.
எதைப் பேசுவதாக இருந்தாலும் எங்களது சமூகத்தினருடன் உட்கார்ந்தே பேச
வேண்டும் என்று பைன்ல்ஸா திட்டவட்டமாக் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டம் காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர்-ஆக்ரா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
போராட்டம் காரணமாக 70க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.