புத்தாண்டுக் கொண்டாட்டம்-நள்ளிரவுக்கு மேல் ஸ்டார் ஹோட்டல்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் களை கட்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இதில் விபரீதம் ஏற்பட்டு சில உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்தது. இதையடுத்து தற்போது டிசம்பர் 31ம் தேதி இரவு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது:
சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு தின கொண்ட்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், அவற்றின் உரிமையாளர்கள், போலீஸôர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கியமான பாதுகாப்பு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நகரில் 31-ம் தேதி முதல் மெரீனா, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்கள், கிழக்குக் கடற்கரை சாலை, பிரதான சாலை சந்திப்புகள், வழிபாட்டுத் தலங்களில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.
சாலை விதிகளை மீறி குடிபோதையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவோர், பெண்களை ஈவ் டீசிங் செய்வோர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரை சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம், பந்தயங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர்.
விபத்துகளைத் தடுக்கும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். வாகன சோதனை நடத்தப்படும்
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமெனில், முன்னதாக அந்தந்தப் பகுதி துணை கமிஷனர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளங்களை மூடி வைக்க வேண்டும். வரவேற்பு அறை, விழா நடைபெறும் அரங்கு, வாகன நிறுத்தும் இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ வேண்டும்.
ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீஸாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஹோட்டல், விடுதிகளின் நிர்வாகிகளே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பார்களைத் தவிர, இதர இடங்களில் மது விற்பனை செய்யக் கூடாது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளின்போது பட்டாசு வெடிக்கக் கூடாது.
நகரில் பிரதான பகுதிகளில் ரோந்து வாகனங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றார் அவர்.