சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி விடுதலை
மதுரை: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 1991 - 96ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. வழக்கு குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகன்நாதன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த சத்தியமூர்த்தி, ஆச்சாரியலு உள்பட 8 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மொத்தம் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் குமார், ராமசாமி ஆகியோர் இறந்துவிட்டனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சம்பத்தை, வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த சுடுகாட்டு கொட்டகை ஊழல் விவகாரத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விடுதலையாகியுள்ள செல்வகணபதி தற்போது திமுகவில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.