எதியூரப்பா ஒரு வெட்கம் கெட்ட மனிதர், ஊழல் பெருச்சாளி-கெளடா பாய்ச்சல்
டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஒரு ஊழல் பெருச்சாளி. வெட்கமே இல்லாத மனிதர் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவே கெளடா.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதியூரப்பாவுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்தபோதும் அவர் அதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை. தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்வதை விட்டு விட்டு மற்ற கட்சிகள் குறித்து குறை கூறி வருகிறார்.
பாஜகவுக்கு கொஞ்சமாவது வெட்கம், சூடு, சொரணை இருந்தால், முதலில் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதியூரப்பா சுத்தமாக வெட்கம் கெட்டவராக இருக்கிறார். எனது 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், இந்த அளவுக்கு ஊழல் புரிந்த, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான ஒருவரைப் பார்த்ததே இல்லை.சரியான ஊழல் பெருச்சாளியாக இருக்கிறார் எதியூரப்பா என்று சாடியுள்ளார் கெளடா.