அனைத்து இலவசத் திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்படும்-கருணாநிதி

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உலகெங்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் நன்னாள்! இந்நாளில் தமிழ்ப் புத்தாண்டுத்திருநாளையும் இணைத்துக் கொண்டாடும் அருமைத்தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
பொங்கல் திருநாள் அறுவடைத்திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி! அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கூடுதல் மழைபொழிந்து
இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை! இயற்கையோடு இணைந்து விவசாயிகள் வளம்பெற 7000 கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி! வட்டியில்லாப் பயிர்க் கடன்! பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகை! விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளுடன் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள்!
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம்! தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை ரத்து! வெகுவாகக் குறைத்து பெயரளவுக்கு மட்டுமே நிலவரி, நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1100! கரும்புவிலை டன் ஒன்றுக்கு ரூபாய் 2 ஆயிரம்!
இரண்டரை லட்சம் பம்ப் செட்டுகளுக்குப் புதிதாக இலவச மின்சார இணைப்பு! பழைய பம்ப் செட் மோட்டார்களுக்குப் பதிலாகப் புதிய மோட்டார்கள்! பனை, தென்னை விவசாயிகள் நலன் கருதி பனைமரத் தொழிலாளர் நல வாரியம்! தென்னை விவசாயிகள் நல வாரியம்! பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்கு வப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படும் சுவை நீரை விற்பனை செய்வதற்கான ஏற்பாடு! கொப்பரை தயாரித்திட தேங்காய் கொள்முதல்!
சத்துணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணையைப் பயன்படுத்துதல்! - எனக் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த அரசு அளித்து வரும் சலுகைத் திட்டங்களோடு; வேளாண்மை செழித்திட அன்று தனிப்பல்கலைக் கழகம் கண்டதுடன் இன்று தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கும் தனிப்பல்கலைக் கழகம்! இப்படி, உழவர் சமு தாயத்தின் நலன்களுக்கு ஆற்றிவரும் அரும் பணிகளோடு அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைய பல நலவாரியங்கள்!
கலைஞர் காப்பீட்டுத்திட்டம்! அவசர மருத்துவ ஊர்தி 108 இலவசச்சேவைத் திட்டம்! ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி! இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்! தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்கள்,
குடிசைப்பகுதிகளே இல்லாத நகரங்கள் காண கலைஞர் வீடு வழங்கும் திட்டம்! படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற பயிற்சிகளோடு இணைந்த வேலைவாய்ப்புத் திட்டம்! - எனப் பல்வேறு திட் டங்களை நிறைவேற்றி, எல்லாப் பிரிவு மக்களும் நலம்பெற பாடுபடும் இந்த அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு அருமைத்தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு - பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications