சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பட்டாசு விபத்தில் சிறுமி பலி-நிவாரணம் அளிக்க வைகோ கோரிக்கை
சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை திருவொற்றியூர் அண்ணல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன்-கல்பனா தம்பதியரின் இரண்டரை வயது மகள் பாவனாஸ்ரீயுடன் திருவொற்றியூர் விம்கோ நகர் விளையாட்டு மைதானத்தில் 16.01.2011 அன்று நடந்த சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்பி வந்தபோது அவரை அமைச்சர் கே.பி.பி.சாமி அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றார். அப்போது பட்டாசு வெடித்துச் சிதறி பார்வையாளர்கள் மீது தீப்பொறிகள் பட்டன.
இதில் இரண்டரை வயது பாவனாஸ்ரீ அதிர்வேட்டின் அதிர்ச்சியாலும் தீக்காயம் ஏற்பட்டதாலும் காதிலும், மூக்கிலும் ரத்தம் வடிய மயங்கி விழுந்தாள். உடனடியாக நுங்கம்பாக்கம் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாவனாஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.
சிலரை மகிழ்விப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாட்டால் இதுபோன்ற துன்பம் ஏற்படுகிறது.
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு உரிய நிவாரணமும், இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications