கருப்புப் பண முதலைகளை காக்க அரசு முயலவில்லை-ஏ.கே.அந்தோணி
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளவர்களைக் காக்கவோ, அதுகுறித்த தகவல்களை மறைக்கவோ அரசு முயலவில்லை என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில்தான் அரசு ஈடுபட்டுள்ளது. உண்மையை வெளிக் கொணருவதில் தீவிரமாகவே உள்ளது. உண்மையைக் கண்டறிவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.
யாரையும் மறைக்கவோ, காப்பாற்றவோ அரசு முயலவில்லை. இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. அரசின் நிலையை பிரதமரும், நிதியமைச்சரும் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் அந்தோணி.
போபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறை சம்பந்தமான விவகாரங்களில் கை மாறிய பல நூறு கோடி லஞ்சப் பணம் சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அந்தோணி நேரடியாக பதில் தரவில்லை.












Click it and Unblock the Notifications